04 December 2014

கிரக மாலிகா யோகம் ( graka malika yogam )

கிரக மாலிகா யோகம்
      ஜாதக அலங்காரம் எனும் நூல் கிரக மாலிகா யோகத்தினைப்பற்றி விரிவாக கூறுகிறது.  மாலிகா என்னும் வடமொழிச் சொல்லிற்கு மாலை (garland) என்று பொருள். எனவே இந்த யோகத்தினை கிரக மாலை யோகம் என பொருள் கொள்ளலாம். சூரியன், சந்திரன், செவ்வாய்,புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் அடுத்தடுத்து ஏழு ராசிகளில் இருந்தால் அதற்குப் பெயர் மாலை யோகம்.

மேலே எழுதியுள்ள வரிசைப்படி என்று மட்டும் இல்லை, வேறு விதமான வரிசையில் கூட கிரகங்கள் இருக்கலாம். எந்த வரிசையில் வேண்டுமென்றாலும் இருக்கட்டும். வரிசையில் கிரகம் இருந்தால் அது மாலையோகம் எனப்படும். ஜாதக ராசி நிலையினை பார்ப்பதற்கே அழகாக இருக்கும். 

லக்கினம் முதல் ஏழு வீடுகளில் கிரகம் (அரியோகம்)

அந்த அமைப்புள்ள ஜாதகன் அழகான தோற்றமுடையவனாகவும், செல்வம் நிறைந்தவனாகவும், மகிழ்ச்சி நிறைந்தவனாகவும் இருப்பான். நன்மைகளை உடையவன், மிகுந்த நீதிமான், அறிவுடைய தலைவன், தான் குலத்திலே விசேசமானவன், நிலைத்த யோகம் உடையவன், என ஜாதக அலங்காரம் கூறுகிறது.

லக்கினம் முதல் ஆறு வீடுகளில் ஏழு கிரகம். (சாதாமினியோகம்)

இந்த அமைப்புள்ள ஜாதகன், அரச தகுதி உள்ளவன். நோயற்ற சுக போக சரீரம் உள்ளவன், செல்வந்தன், இசை ஞானம், புத்தியுள்ளவன், நீதிமன், என்று புகழப்படுவான்.

லக்கினம் முதல் ஐந்து வீடுகளில் ஏழு கிரகம் (பாச யோகம்)

இந்த அமைப்புள்ள ஜாதகன், அறிவு மிக்கவனாகவும், மொழியில் புலமை பெற்றவனாகவும், தன்னுடைய செயலை சிறப்பாக செய்பவன், சிறந்த விரிவுரையாளன், அரசனால் புகழ் பெறுபவன் என ஜாதக அலங்காரம் கூறுகிறது.

லக்கினம் முதல் நான்கு வீடுகளில் ஏழு கிரகம். (கேதார யோகம்)

இந்த அமைப்புள்ள சாதகர்கள், விவசாயம் செய்து செல்வம் அடைவார்கள். தனது உறவினர்களிடம் அன்பு செய்வார்கள். நல்ல சுக ஜீவனம் உடையவராக, அரச சன்மானம் பெறுவார். 

லக்கினம் முதல் மூன்று வீடுகளில் ஏழு கிரகம் (சூல யோகம்)

இந்த அமைப்புள்ள ஜாதகர் சிறந்த வித்தை கற்றவனாகவும். உற்ச்சாகம் மிக்கவன், சிறந்த வியாபாரி, பொன் பொருள் சேர்ப்பவன், லாபம் பெறுவதில் நிகர் இல்லாதவன், தனது திசா புத்திகளில் நன்மை தீமை அடைபவன், எனவும் ஜாதக அலங்காரம் நூல் கூறுகிறது.

லக்கினம் மற்றும் இரண்டாம் வீடுகளில் ஏழு கிரகம். (நீளகயோகம்)
அந்த அமைப்புள்ள ஜாதகன், பெரியோர்களை பணிந்து அவர்களிட விசயங்களை சாதிக்கும் ஆற்றல் பெற்றவன், நிறைந்த ஆயுள் உடையவன், சுற்றத்தாருக்கு அதிக நன்மை செய்பவன்,நீதிமான் என ஜாதக அலங்காரம் கூறுகிறது.

லக்கினத்தில் ஏழு கிரகங்கள் (கெவுள யோகம்)

இந்த அமைப்பில் பிறந்தவன், எந்த விதமான செல்வமும் இல்லாதவனாகவும்,அரை உடம்பாக இழைத்தும் சோம்பேறியாகவும் இருப்பான், தரித்திற யோகம் இது. சிற்பகலையில் வல்லவனாக சதா ஊர் சுற்றி திரிவான் என இந்த அற்புதமான நூல் கூறுகிறது

உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாக அனுப்புங்கள்

No comments:

Post a Comment