08 May 2015

ஜாதகத்தின் பயன் என்ன? vol-1

நாம் வாழும் இந்த  உலகில் எந்த ஒன்றும் அழிவதில்லை. அதேபோன்று, ஏற்கனவே இல்லாத ஒன்றை புதிதாக நம்மால் சிருஷ்டிக்கவும் இயலாது. எப்போதும் உள்ள ஒன்று காலத்தின் விதிகளுக்கு ஏற்ப, உருவத்திலும், உள்ளடக்கத்திலும் உருமாறிக் கொண்டிருக்கிறது. நாம் இந்த தினத்தில் சந்திரனையும், சூரியனையும் நட்சத்திர மண்டலத்தினையும் பார்க்கிறோம், காலத்தின் கட்டளையால் அவைகள் மறைகின்றன. பின்னர் மீண்டும் மறுநாள் தோன்றுகின்றன. நமது புராணங்களில் இது பற்றி மறு உயிர்த்தல், மறு பிறப்பு பற்றிய இந்தக்கோட்பாட்டிற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன.


மனிதன் இப்பிறவியில் செய்யும், பாவ புண்ணியத்திற்கேற்ப அவனின் மறுபிறப்பு நிர்ணயிக்கப்படுகின்றது. இந்தப் பிறவியில் அவன் செய்யும் புண்ணிய காரியங்கள், அடுத்த பிறவியில் அதிர்ஷ்டமான ஜாதகம் அமையுமாறு ஒரு கணத்தில் அவனை பிறக்கவைக்கிறது. மறுபிறவியில் இந்தப் பூமியில் வாழும் அவன் வாழ்வு சந்தோஷங்களால் நிறைவடையும். மாறாக பாவ காரியங்களை செய்தவனின் அடுத்த பிறவி வாழ்வு, அதற்கான சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியதாக அமைந்துவிடும். எனவும் நமது இந்து சாஸ்த்திரத்தில் நம்புகிறோம். நமது முன் பிறப்பினில் நம்முடைய நடவடிக்கை எப்படியோ அதன் படியே நமது அடுத்த பிறவி அமைகிறது.

பிறக்கும் அந்தக் கணத்திலேயே, கிரகங்கள் அவன் வாழ்வையும், எதிர்காலத்தையும் தீர்மானித்து விடுகின்றன என்பதை ஜோதிட சாஸ்திரக் கோட்பாடுகள் நிச்சயிக்கின்றன. ஆகவே ஜோதிட சாஸ்திரம், ஒருவன் பிறக்கும் போது இருக்கும் கிரக நிலைகளைக் கொண்டு வாழ்வின் நிலைகளை அனுமானிக்கும் சாத்தியப்பாடுகள் உடையதாய் இருக்கிறது.

குழந்தை தாயின் கருவறையிலிருந்து வெளிவந்து, தரையைத் தொடும் போது கிரகங்களின், நட்சத்திரங்களின் தாக்கம் பெற்று, அதுமுதல் அதன் எதிர்காலத்தை இவைகளே வடிவமைக்கின்றன. ஜாதகம் என்று நாம் பொதுவாக குறிப்பிடுவது என்னவெனில், குழந்தை பிறப்பின் போதான கிரகநிலைகளைப் பற்றிய தெளிவான வாசிப்பாகும். மேலும் இந்த கிரகங்களை குழந்தையின் வாழ்க்கையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சரியாக கணித்தல் என்பதே ஜாதகத்தின் விசேஷம்.

இருண்ட அறையை, சிறு ஜோதி வெளிக்காட்டுவது போல், ஜோதிடம் ஜாதகன் ஒருவனின் வாழ்க்கையில் தெரியாத ஒன்றை அவனுக்கு புரிய வைக்க உதவுவது. சரியான நேரம், சரியான இடம் இவற்றைக் கொண்டு குறிக்கப்பட்ட ஒருவனின் ஜாதகம், அவனின் வாழ்க்கையையும், விதிகளையும், மிகச் சரியாகவே கணிக்கும். வழி தெரியாமல் தடுமாறாமல் இருப்பதற்கு நமக்கு வெளிச்சம் எவ்வளவு அவசியமோ, அவளவு அவசியம் ஜாதகமும், ஜோதிட கலையும். வழியினை அறிந்து நாம் எளிதாக நம்முடைய வாழ்க்கை பயணத்தினை அமைத்துக்கொள்ள நமது ஜாதகம் நமக்கு உதவுகிறது. கண்ணுக்கு தெரியும் பாதையில் நாம் பயணிக்காமல் வெறுமனே பாதையினை பார்த்துக்கொண்டே இருந்தால், எப்படி நம்மால் போய் சேர வேண்டிய இடத்திற்கு போகவே முடியாதோ, அப்படியே, நல்ல காலம் வந்து இருந்தாலும் நாம் முயற்சித்து வாழ்க்கையினில் முன்னேற உத்வேகத்துடன், போரட்டாமல் இருந்தால் அந்த நல்ல காலத்தினை பயன்படுத்தவே முடியாமல் போய் விடுகிறது.


காலத்தின் ஓட்டத்தினை பற்றியும், அதன் பதையினை பற்றியும் புரிந்து கொண்டு சரியாக திட்டமிட்டு உழைத்தால் வெற்றி மிகவும் எளிதாகவும், பெரிதாகவும் பரிணமிக்கும். மாறாக தற்போதைய சூழல் சரியில்லை எனும் பொது கூட மெதுவாக ஜாக்கிரதையாக நாம் நம்முடைய வாழ்க்கை பயணத்தினை கொண்டு செல்லும் பொது, தோல்விகளும், துயரங்களும் மிகவும் சிறிதாகவே வரும். அதனையும் தெய்வ சக்தியினை துணை கொண்டு மாற்றியமைக்க முடியும்.

No comments:

Post a Comment