28 October 2015

ஜாதகத்தின் பயன் என்ன? vol-5

வேதத்தின் ஒரு அங்கமாக ஜோதிடம் பாவிக்கப் படுகிறது. ஜோதிட சாஸ்த்திரம் பூவுலகில் நாம் பிறந்த நேரத்தினை கொண்டு கிரகங்கள் நட்சத்திரங்கள் ஆகியவற்றின் இணைவுகளை கொண்டு நமது வாழ்க்கையில் என்ன விதமான சம்பவங்கள் உண்டாகக்கூடும் என்பதனை நமக்கு கூறுகிறது. கிரகங்களால் உண்டாகும் நன்மை தீமைகள் ஒரே மாதிரியாக நடந்து வருவது இல்லை. நமது வீட்டில் குளியல் அறை, படுக்கை அறை, சமையல் அறை, விருந்தினர் அறைகள் என எல்லாம் இருந்தாலும், நாம் எப்படி ஒரே சந்தர்ப்பத்தில் எல்லாவற்றையும் உபயோகம் செய்வது இல்லையோ, அது போலவே கிரகங்களும் அதன் வேலைகளை எல்லா நாட்களிலும் செய்வது இல்லை. ஒரு நியதிக்கு உட்பட்டு வரிசைபடியே கிரகங்கள் தங்களின் பலன்களை தருகிறது.


எந்த கிரகம் தற்போது என்ன பலன்களை தருவார், எவ்வளவு காலம் தருவார் என்பதனை நிர்ணயிக்க தெசா புக்திகளை உபயோகம் செய்யும் முறைகளை, பராசர முனிவர் கூறியுள்ளார். அதில் நாற்பதுக்கும் மேற்ப்பட்ட முறைகள் இருந்தாலும், தற்போது விம்சோத்ரி தசை, அஷ்டவர்க்க தசை ஆகிய இரண்டு மட்டுமே நடைமுறையில் உள்ளது. அதிலும் அஷ்டவர்கத்தில் பிந்துக்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது. இராசி பிண்டம், கிரகபிண்டம், கிரக குணாகரம் போன்ற பவிதமான உட்பிரிவுகளை பலரும் கணிப்பதே இல்லை.

விம்ஷோத்ரி திசாபுத்தியில் ஒரு சுற்றுக்கு 120 வருடங்களாக கணக்கிடுகிறார்கள். ஒருவரின் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ப ஆரம்ப திசாபுத்தி அமைகிறது. ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் ஜனன சமயம் செல்லு போக இருப்பு என குறித்து இருப்பார்கள். அதுவே அவரின் முதல் திசை புத்தி ஆகும். அதிலிருந்து

சூரியன் தசை 6வருடம். 
சந்திரன் தசை 10வருடம். 
செவ்வாய் தசை 7வருடம்.  
ராகு தசை 18வருடம். 
குரு தசை 16வருடம். 
சனி தசை 19வருடம். 
புதன் தசை 17வருடம். 
கேது தசை 7வருடம். 
சுக்கிரன் தசை 20வருடம் 

என கிரகங்கள் தங்களின் பலன்களை கொடுக்கும். அதிலும் அதன் உட்பிரிவாக தன் புத்தி முதலாக கொண்டு அனைத்து கிரகங்களும் தமது புத்திகளை நடத்தும். புத்தியின் உட்பிரிவாக அந்தரம் மற்றும் சூட்சும அந்தரம் என பல உட்பிரிவுகள் உள்ளது. அவைகளை கணிப்பதன் மூலம் கிரக பலன்களை துல்லியமாக அறியமுடியும். (தொடரும்) 

No comments:

Post a Comment